Tuesday 18 February 2014



காலப்பயணம் -ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)

---------------------------------------------------------------------



பொறுமையாக படித்து பாருங்கள் ..........



Right in the centre of the Milky Way, 26,000 light years from us, lies the heaviest object in the galaxy. It is a supermassive black hole containing the mass of four million suns crushed down into a single point by its own gravity. The closer you get to the black hole, the stronger the gravity. Get really close and not even light can escape. A black hole like this one has a dramatic e‑ffect on time, slowing it down far more than anything else in the galaxy. That makes it a natural time machine – Stephen Hawking




காலப்பயணம் சாத்தியமா என்று விளக்கும் அவரது கட்டுரை ஒன்றில் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லியிருப்பதுதான் மேலே இருக்கும் மேற்கோள். பலப்பல ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் தவறாமல் இடம்பெறுவது இந்த காலப்பயணம் என்ற வஸ்து. வேறொரு காலத்தில் மூக்கை நுழைப்பது என்பது மனிதனின் ஆழ்மன ஆசைகளில் ஒன்று. எக்கச்சக்கமான வேலைகளை செய்யலாம் என்பதே காரணம். போதாக்குறைக்கு திரைப்படங்கள் இந்த ஆசையை நன்றாகவே தூண்டிவிட்டிருக்கின்றன. ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் கற்பனையானது என்பது சராசரி மனிதர்களாகிய நமக்கே தெரிந்திருக்கும்போது, ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் ஏன் அவ்வப்போது எதையாவது இப்படிப் பேசி நம் ஆசையைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்?



காரணம் இருக்கிறது. அதற்கு முன்னர், காலப்பயணத்துக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் இன்னொரு வஸ்துவையும் பார்க்கவேண்டும். அதுதான் Wormhole.



மிக மிக எளிமையாக சொல்லப்போனால், நாம் தற்போது நம் ஊரில் அமர்ந்துகொண்டு கணினித் திரையை நோக்கியவாறே எதையாவது நோண்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது திடீரென நமக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. ‘இன்னும் அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவில் வந்து முதலில் என்னைச் சந்திப்பவர்களுக்கு 500 கோடி அளிக்கப்படும்’ என்று பில் கேட்ஸ் அறிவித்திருக்கிறார். இது முற்றிலும் நம்பகமான உண்மை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படி அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவுக்குச் செல்வது?



இருக்கும் இடத்தை விட்டு எழுகிறோம். ஜாலியாக நமது அறையில் இருக்கும் ஒரு கதவைத் திறக்கிறோம். கதவின் மறுபக்கத்தில் அன்டார்ட்டிகா. தொலைவில் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு பில் கேட்ஸ் நிற்கிறார். அடுத்த நிமிடம் நம் கையில் 500 கோடி. இதுதான் Wormhole. இரண்டு இடங்களை இணைக்கும் ஒருவித பாலம் போன்ற அமைப்பு. அந்த இரண்டு இடங்களுக்கும் இடையே இருக்கும் தூரம், மனித மனதால் கற்பனையே செய்யமுடியாத ஒரு மிகப்பெரிய தூரமாகவும் இருக்கலாம்.



இது சாத்தியமா?



அவசியம் சாத்தியம்தான் என்பதுதான் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், தற்போதுகூட நம்மைச் சுற்றிலும் எக்கச்சக்கமான wormholeகள் உள்ளன என்று சொல்கிறார் ஹாக்கிங். அப்படியென்றால் எளிதில் இதுபோன்று எங்குவேண்டுமானாலும் செல்லலாமே? அங்குதான் கதையில் ட்விஸ்ட். தற்போது இருக்கும் wormholeகள் அளவில் மிக மிகச் சிறியவை. எந்த அளவு என்றால், ஒரு சென்டிமீட்டரில், ட்ரில்லியனில் ட்ரில்லியனில் பில்லியன் பாக அளவே இவை இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது. இவ்வளவு சிறிய வஸ்துக்களுக்குள் எப்படி மனிதன் நுழைய முடியும்?



Wormhole-stephen hawking



இவை எங்கே இருக்கின்றன? க்வாண்டம் மெகானிக்ஸில் Quantum Foam என்ற ஒரு பதம் உண்டு. எந்தப் பொருளுக்குள்ளும் அடிப்படையாக இருக்கும் ஒரு துகள். இதனை எப்படி அளப்பது? மனிதர்களால் அளக்கக்கூடிய அளவைகளில் இதுவரை இருப்பதிலேயே சிறிய அளவு ஒன்றை, Planck Length என்று அழைப்பார்கள். இதை எண்ணிக்கையில் சொல்லவேண்டும் என்றால், 0.00000000000000000000000000000000001 என்று அதனைக் குறிக்கலாம் (டெஸிமல் பாயிண்ட்டுக்குப் பின்னர் 34 ஸைஃபர்கள்). எனவே, இத்தனை சிறிய ஒரு வஸ்துவை நாம் wormholeஆக உபயோகிக்க முடியாது. கூடவே, இந்த வார்ம்ஹோல்கள் உருவானவுடனே அழிந்துவிடுபவை.



சரி. எப்படியாவது ஒரு வார்ம்ஹோலைப் பிடித்து, அதனை பலப்பல மடங்குகள் பெரிதாக்கினால், அப்போது மனிதன் அதனுள் செல்ல இயலும். அதேபோல், இப்படிச் செய்வதன்மூலம் நம்மாலேயே சொந்தமாகப் பெரிய வார்ம்ஹோல்களை உருவாக்கலாம். அப்படி நடந்தால்?



பூமியின் அருகே இந்த வார்ம்ஹோலின் ஒரு பகுதி. அதன் மற்றொரு பகுதி, எங்கோ தொலைதூரத்தில், நம்மால் கற்பனையே செய்துபார்க்கமுடியாத விண்வெளியின் மற்றொரு இடத்தில் இருக்கும். எனவே, இதனுள் நுழைந்தால், குறுகிய காலத்தில் அந்த இன்னொரு பகுதிக்குப் போய்விடமுடியும். இதனால் தூரம் என்பது குறுகிவிடுகிறது. மனிதன் விண்வெளியின் பலப்பல இடங்களை ஆராயமுடியும்.



இது, தூரம் என்பதை மனதில்கொண்டு உருவான தியரி. அதுவே, இந்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும், ‘காலம்’ என்ற அளவையால் பிரிக்கப்பட்டால்? அதாவது, வார்ம்ஹோலின் இரு முனைகளுமே பூமியை நோக்கியே குவிக்கப்பட்டால், ஒரு முனையில் நுழைந்து, மற்றொரு முனையின் வழியாக நாம் வெளியேறும்போது பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன்போ பின்போ பூமியை நாம் பார்க்கலாம். இதுதான் விஞ்ஞானத்தின் பார்வையில் காலப்பயணம். ஆனால், இதற்கான சில முன்னேற்பாடுகள் இருக்கின்றன. நாம் பயணிக்கும் தூரம் என்பது ஒரு மணி நேரத்துக்கு ஐந்துகோடி கிலோமீட்டர்களாக இருக்கவேண்டும். அதேசமயம், இதில் உள்ள ஒரு சிக்கல் – இதன்மூலம் நம்மையே கடந்தகாலத்தில் நாம் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது ஒரு துப்பாக்கியை எடுத்து நாம் நம்மையே சுட்டுவிட்டால் என்ன ஆகும்? இத்தகைய ஒரு சிச்சுவேஷன் தான் paradox. நடக்குமா நடக்காதா என்று சொல்ல இயலாத ஒன்று. உண்மையில் Grandfather Paradox என்பது விஞ்ஞானத்தில் புகழ்பெற்ற ஒன்று. கடந்த காலத்தில் நமது தாத்தாவை பேச்சிலராக சந்தித்து, அவரைக் கொன்றுவிட்டால், தற்காலத்தில் நாம் உயிரோடு இருக்கமுடியுமா?



இதனால்தான் – இப்படிப்பட்ட குழப்படிகள் நேரலாம் என்பதால்தான், காலப்பயணம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் விஞ்ஞானிகளால் சொல்லப்படுகிறது. Cause & Effect என்பது நமக்கெல்லாம் தெரியும். ஒரு செயல் நடந்தபின்னர்தான் அதன் விளைவு நடக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு கால இயந்திரத்தை நாம் கண்டுபிடித்து, நம்மையே கடந்தகாலத்தில் சென்று சுட்டுக்கொண்டால், விளைவு என்பது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே நடந்துவிடுகிறது அல்லவா? இப்படி நடக்கலாமா? இத்தனை கோடி ஆண்டுகளாக இந்த ப்பிரபஞ்சம் எதுவோ ஒரு விதியைப் பின்பற்றித்தான் செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அப்படி ஒரு சம்பவம் நடப்பதை எப்படியாவது பிரபஞ்சம் தடுத்துவிடும் என்பது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து. கூடவே, அப்படி ஒரு வார்ம்ஹோல் உருவாக்கப்பட்டாலும்., இயல்பான ரேடியேஷன் அதனுள் புகுந்து, அந்த வார்ம்ஹோலையே அழித்தும் விடும். இதனால், வார்ம்ஹோல்கள் உருவாக்கப்படும் சாத்தியம் இல்லை.



ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் சாத்தியப்படாத விஷயமும் இல்லை. எப்படி? காலம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே போன்று இல்லை. பூமியில் இருக்கும் காலம், எங்கோ விண்வெளியில் இருக்கும் காலத்தைவிட வேறானது. ஒரு பொருளின் mass – நிறை என்பது அதிகமாக ஆக, அங்கே காலம் மெதுவாக ஆகிறது என்பது ஐன்ஸ்டைன் சொன்னது. இப்போது, மேலே மேற்கோளில் சொல்லப்படும் கருந்துளை என்பதைப் பற்றி யோசித்தால், நமது Milky Way நட்சத்திர மண்டலத்தின் நட்டநடுவே, இருபத்தாறாயிரம் ஒளி வருடங்களுக்கப்பால், மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட னாஙு மில்லியன் சூரியன்களின் நிறையை ஒரு மிகச்சிறிய புள்ளியில் பெற்றிருக்கும் வஸ்து இது. இந்தக் கருந்துளையில்தான் காலம் என்பது குறைகிறது. அதாவது, ஒரு விண்கப்பல் இந்தக் கருந்துளையை சுற்ற ஆரம்பித்தால், காலம் என்பது அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்குப் பாதியாகக் குறைகிறது. இதனால், எவ்வளவு காலம் அந்தக் கப்பல் கருந்துளையை சுற்றுகிறதோ, பூமியின் காலம் அதைப்போல் இரண்டு மடங்காகிவிடும். அவர்கள் பத்து வருடங்கள் சுற்றிவிட்டு பூமிக்கு வந்தால், இங்கே 20 வருடங்கள் முடிந்திருக்கும். இதுதான் காலப்பயணம்.



இதேபோல் இன்னொருவிதமாகவும் காலப்பயணத்தை மேற்கொள்ளலாம். அது- ஒளியின் வேகத்தில் பயணிப்பது. ஒளியின் வேகம் – ஒரு செகண்டுக்கு 186,000 மைல்கள். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, இந்த வேகத்தை மிஞ்சவே முடியாது. அது சாத்தியமற்றது. ஆனால், இந்த வேகத்துக்கு அருகே – இதில் 99.99% அளவு வேகத்தை ஒரு விண்கப்பல் அடைந்தால், அப்போது காலப்பயணம் சாத்தியம். அப்படி மட்டும் நடந்தால், இந்த வேகத்தில் பயணிக்கும் விண்கப்பலில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் (பிரம்மாவின் ஒரு நாள் என்பதற்கு ஹிந்து மதம் கொடுத்திருக்கும் கணக்குகளையும் அப்படியே ஒருமுறை இங்கே பார்த்துவிடுங்கள்). இப்படி மட்டும் நடந்தால், நமது நட்சத்திர மண்டலமான மில்க்கி வேயின் எல்லையை பூமியில் இருந்து எட்டிப்பிடிக்க வெறும் 80 வருடங்கள்தான் ஆகும். மட்டுமில்லாமல், பூமிக்கு நாம் திரும்பிவரும்போது கணக்கிலடங்கா வருடங்கள் கழிந்திருக்கும். இதுதான் ரிலேட்டிவிடி தியரி.




இப்போது, இதுவரை நாம் பார்த்தவற்றில் முக்கியமான விஷயங்களான காலப்பயணம், கருந்துளையை விண்கலம் சுற்றுவது, Wormhole ஆகியவற்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இணையத்தில் லீக் செய்யப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் திரைக்கதையைப் படித்தால், இந்த மூன்றும் அந்தப் படத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிகிறது. இந்தத் திரைக்கதை உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால், படிக்கப்படிக்க அதில் நோலன் சகோதரர்களின் முத்திரை நன்றாகவே தெரிகிறது. இந்தத் திரைக்கதைக்கும் Inception திரைக்கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.



திரைக்கதையின்படி, வார்ம்ஹோல் ஒன்றுதான் ஒட்டுமொத்தத் திரைக்கதையிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நாம் மேலே பார்த்த காலப்பயணம் இதில் இருக்கிறது. அதாவது, ஒரு கருந்துளையை சுற்றும் விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது எக்கச்சக்கமான வருடங்கள் கழிந்திருப்பது. கூடவே, மெலிதான காதல் ஒன்றும் இதில் இருக்கிறது. திரைக்கதையின் இரண்டாம் பகுதி படுவேகமாக செல்கிறது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக. படத்தின் முதல் டீஸரைப் பார்த்தாலும், அதற்கும் இந்தத் திரைக்கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் இணையத்தில், இந்தத் திரைக்கதையை மாற்றித்தான் நோலன் படமாக எடுத்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. படத்தை எங்கெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கும், திரைக்கதையில் வரும் லொகேஷன்களுக்கும் தொடர்பு இருக்கிறது.



ஒட்டுமொத்தமாக இந்தத் திரைக்கதையைப் படித்துவிட்டுப் பார்த்தால், சென்ற ஆண்டு வெளிவந்த Gravity படத்தைப் போல, இந்த ஆண்டின் இறுதியில் இண்டர்ஸ்டெல்லார் இருக்கப்போவது உறுதி. க்ராவிடி, இண்டர்ஸ்டெல்லருக்கான ஒரு ட்ரெய்லராக அமையும் என்று தோன்றுகிறது.



விண்வெளி என்ற புதிர் இன்னும் விஞ்ஞானிகளின் மனதை ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக: விண்வெளியின் எல்லை எது? அந்த எல்லைக்கப்பால் வேறொரு விண்வெளி இருக்கிறதா? இதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்தறியவேண்டும் என்றால் வார்ம்ஹோல்கள் அவசியம் தேவை. இந்தக் கேள்விக்கே பதில் இந்தத் திரைக்கதையில் இருக்கிறது. கூடவே, நிலவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் சென்றதே ஒரு கட்டுக்கதை என்றும் திரைக்கதையில் வருகிறது. பல கற்பனைக்கெட்டாத பிரம்மாண்டங்கள் (கான்ஸெப்ட்களாக) இந்தத் திரைக்கதையில் வருகின்றன. இதனால்தான் இந்தத் திரைக்கதை (இதேபோன்று எடுக்கப்பட்டிருந்தால்) அனைவருக்கும் பிடிக்கும் என்பது என் கருத்து.



பொதுவாக விண்வெளிப்பயணத்தைப் பற்றிய படங்கள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரேபோன்ற கான்ஸெப்ட்களே இருக்கும். உதாரணமாக, 2012ல் வெளிவந்த Prometheus படத்தை எடுத்துக்கொண்டால், வேற்று நட்சத்திரம் ஒன்றுக்குச் செல்லும் சில பயணிகள் என்பதுதான் அதன் கரு. அதில் உபயோகப்படுத்தப்பட்ட கான்ஸெப்ட்டின் பெயர் – Stasis. விண்கலத்தின் crew, தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு காலத்தைக் கடப்பதே இந்த ஸ்டாஸிஸ். அந்தப் படத்தில் ஒரு ஆண்ட்ராய்ட் ரோபோ வருகிறது. அதேபோல் இண்டெர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் ரோபோக்கள் வருகின்றன. ஆனால் ப்ராமிதியஸ் போன்ற திராபையாக இது இல்லை. முதல் பகுதி மிகவும் மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி அட்டகாசமான வேகத்தில் சென்றது. இந்தத் திரைக்கதையைப் படித்தபோது, Event Horizon படம் நினைவு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் அது ஒன்று. ஈவெண்ட் ஹொரைஸன் படத்திலும் வார்ம்ஹோல் வருகிறது. ஆனால் அந்தப் படத்தில், செயற்கையான கருந்துளையை உருவாக்கி, அதன்மூலம் ஒரு வார்ம்ஹோலை உருவாக்குவது பற்றி இருக்கும். இதன்மூலம் அந்த விண்கலம், விண்வெளியின் இன்னொரு எல்லைக்குச் சென்றுவிடும். அங்கு இருப்பது – நரகம். மிகவும் வித்தியாசமான கற்பனையில் எடுக்கப்பட்ட படம் அது. ஆனால், சரியாக ஓடவில்லை. கிட்டத்தட்ட இண்டர்ஸ்டெல்லார் மற்றும் ஈவண்ட் ஹொரைஸன் படங்களின் கரு ஒன்றுதான். ஆனால், இண்டர்ஸ்டெல்லார், நோலன் சகோதரர்களால் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கிறது. நோலன் சகோதரர்களின் முத்திரையான முன்னும் பின்னும் திரைக்கதையில் லிங்க் செய்வது இதில் இருக்கிறது. அப்படி இணைக்கப்படுபவைதான் திரைக்கதையின் ட்விஸ்ட்களில் ஒன்று.



இதேபோல், இந்த வார்ம்ஹோல் கான்ஸெப்ட், 2006ல் வெளிவந்த Déjà Vu படத்திலும் லேசாக உபயோகிக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் வரும் Snow white கருவியின் மூலம், கதாநாயகன் கடந்தகாலத்துக்குச் செல்வது (மேலே நாம் பார்த்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும் பூமியில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது உதாரணம்). பஸிஃபிக் ரிம் படத்திலும் இப்படி ஒரு வார்ம்ஹோல் கடலின் அடியில் இருக்கும்.



பொறுத்துப் பார்ப்போம். இன்னும் ஒன்பதே மாதங்கள்தான். வேறு ட்ரெய்லர்கள் வரட்டும். அப்போது இந்தத் திரைக்கதையின் நம்பகத்தன்மையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த கானோளிகளையும் பாருங்கள் ....







http://edhugai.blogspot.in/2014/02/stephen-hawking.html

Friday 7 February 2014


'என் பையனைப் பத்திக் கவலையில்லீங்க... இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கிறான். கேம்பஸ்ல செலக்ட் ஆகி ஏதாவதொரு சாஃப்ட்வேர் கம்பெனியில சேர்ந்து, கை நிறைய சம்பாதிப்பான். சரி, உங்க பையன் எந்த குரூப்?’ ஏதோ லெதர் டெக்னாலஜியாம்!’ - இதுதான் அந்த அப்பாவித் தந்தையின் பதில். எந்த இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்தாலும், அது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்குத்தான் எனும் எண்ணம் நம் எல்லாருக்கும் வந்துவிட்டது. ''உலகின் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கு ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர், தன்னை ஐ.ஐ.டி மாணவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்வார். தமிழகத்தின் மிகச் சிறந்த மாணவர்கள் கூட, அதிகபட்சமாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குள்ளேயே, தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொள்கின்றனர். உலகின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ..ஐ.டி பற்றிய விழிப்பு உணர்வு இங்கு மிக மிகக் குறைவு. இதனால், நஷ்டம் நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்தான்!



உலகின் அத்தனை முன்னணி நிறுவனங்களும் இங்கே கடை பரப்பி வைத்து காத்திருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களைத் தவிர எலெக்ட்ரிக்கல், மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷன், கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன'.

IIT  (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி)

ஐ.ஐ.டி சென்னை, மும்பை, டெல்லி, காரக்பூர் (கொல்கத்தா) உட்பட ஏழு இடங்களில் உள்ளது. மேலும், புதிதாக ஒன்பது இடங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. பி.இ / பி.டெக் / பி.ஆர்க் என ஆரம்பித்து போஸ்ட் டாக்ட்ரேட் வரையில், தொழில்நுட்பம் சம்பந்தமான அத்தனை படிப்புகளுக்கும் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி.IIT - JEE, JMET, GATE  என படிப்புகளுக்கு ஏற்றவாறு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும். ஐ.ஐ.டி என்பது ஒரு இரும்புக்கோட்டை என்ற மாயை பலரது மனதில் பதிந்துவிட்டது. ஐ.ஐ.டியில் சேர்வது அவ்வளவு கடினமான காரியமும் அல்ல. அதே சமயம், சுலபமான விஷயமும் அல்ல! குறைந்தபட்சம் எட்டாவது படிக்கும் போதிலிருந்தே தங்களை மாணவர்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மாணவர்கள் அனைவருக்கும் ஐ.ஐ.டி பற்றி ஒரு புரிதல் வரும்போது, தமிழகத்தின் வளர்ச்சியில் ஆச்சரியத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

CIPET  (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜி)

சிப்பெட், இந்தியாவில் பதினைந்து இடங்களில் உள்ள கல்வி நிறுவனம். சென்னையில் இருப்பதுகூட, நம்மில் பலருக்குத் தெரியாது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இந்த நிறுவனம், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறையின் கீழ் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் தான் பரம்பொருள். ஆட்டோமொபைல் துறையிலும் பிளாஸ்டிக்கின் தேவை இன்றியமையாதது. டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, யு.ஜி. பி.ஜி. பி.எச்டி. என பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் 'அ முதல் ஃ வரை’ கற்றுத் தரும் நிறுவனம் இது.இதைத் தவிர்த்து, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளும், அப்கிரேடேஷன் படிப்புகளும் இங்கு ஏராளமாக உள்ளன. இன்ஜினீயரிங் பின்புலம் இல்லாதவர்கள்கூட பி.எஸ்சி கெமிஸ்டிரி டிகிரி முடித்திருந்தால், அதற்கேற்ற படிப்புகளில் இங்கு சேர முடியும். பி.எஸ்சி முடித்தவர்களுக்கு 'பிஜி டிப்ளமோ இன் பிளாஸ்டிக் பிராஸசிங் அண்டு டெஸ்டிங்’ (PGD-PPT)  என்ற ஒன்றரை வருடப் படிப்பு இருக்கிறது.

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு 'போஸ்ட் டிப்ளமோ இன் பிளாஸ்டிங் மோல்டு டிசைன்’ என்ற ஒன்றரை வருடப் படிப்பை உருவாக்கியுள்ளனர். இதைத் தவிர, 'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி’ (DPMT),'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி’ (DPT) போன்ற படிப்புகளும் உள்ளன. யிணிணி JEE (Joint Entrance Exam) நுழைவுத் தேர்வு எழுதியே இக்கல்லூரியில் சேர முடியும். ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பங்கள் தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.cipet.gov.in என்ற வலைதளத்தைப் பார்வையிடவும்.

CITD (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டூல் டிசைனிங்)

டூலிங் என்ற துறை பற்றி இங்கு விபரமறிந்தவர்கள் மிகச் சொற்பம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்பூன், டம்ளரில் இருந்து கார் பானெட் வரை டூலிங்தான் எல்லாமே. இது டையிங் (Dyeing)  மோல்டிங் (Moulding)  என்றும் அழைக்கப்படும். டூலிங் படித்தவர்களுக்கு உலகம் முழுவதிலும் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள CITD இந்த டூல் டிசைனிங் படிப்புக்கான ஒரு முக்கிய நிறுவனம்.மூன்று வாரம் முதல் இரண்டு மாதம் வரையிலான காலத்தில் கற்றுத் தரக்கூடிய, இருபத்தைந்து குறுகிய கால படிப்புகளையும் இவர்கள் வழங்குகின்றனர். CAD / CAM, ஆட்டோமேஷன், VLSI - Very Large Scale Integration, Microcontrollers  எனப் பல தளங்களில் இந்த படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. பி.இ. /பி.டெக் மாணவர்களும், டிப்ளமோ மாணவர்களும் இதில் சேரலாம். ஏப்ரல் முதல் ஜூலை வரை, டிசம்பரில் இருந்து ஜனவரி வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு புது பேட்ச் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கான கல்விக் கட்டணம் ரூ.3,500 முதல் 10,500 வரை. தேர்ந்தெடுக்கும் கோர்ஸுக்கு ஏற்ப மாறுபடும்.இனி வரும் காலங்களில் வெறும் பி.இ பட்டம் மட்டும் உதவாது. இது மாதிரியான சிறப்புக் கல்விதான் மற்றவரிடம் இருந்து உங்களை முன்னிலைப்படுத்தும். மேலும் விபரங்களுக்கு www.citdindia.org  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

NTTF (நெட்டூர் டெக்னிக்கல் டிரெய்னிங் ஃபவுண்டேசன்)

என்.டி.டி.எஃப் வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல, இது தொழிற்சாலையும்கூட! இந்தியாவில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட, தங்கள் வேலைகளை இவர்களிடம்தான் அவுட்சோர்ஸ் முறையில் அளிக்கின்றனர். அங்கே தயாரிப்பு வேலைகளைச் செய்வதெல்லாம் இதன் மாணவர்களே! அவர்களின் அந்த அனுபவம், படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு கை மேல் வேலையைக் கொண்டு வந்து சேர்க்கும். இந்தியா முழுவதும் பத்தொன்பது மையங்களில் செயல்படும் இந்நிறுவனம், தமிழகத்தில் வேலூர், தூத்துக்குடி மற்றும் கோவையில் உள்ளன.இங்கு டிப்ளமா, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, பிஜி தவிர்த்து, சான்றிதழ் படிப்புகளும், குறுகிய காலப் படிப்புகளும், தொலை தூரப் படிப்புகளும் உள்ளன.பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான படிப்புகளும் இங்கு உண்டு. பள்ளித் தேர்வு மதிப்பெண்களுடன் NTTF நடத்தும் தனி நுழைவுத் தேர்விலும் தேர்ச்சியடைய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.nttftrg.com என்ற வலைதள முகவரியில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். டிசைன் சம்பந்தமான படிப்புகளுக்கு இந்தியாவில் அதிகமான அளவில் கல்லூரிகள் இல்லாதது வருத்தப்படக்கூடிய விஷயம். அப்படியிருக்கும் ஒரு சில கல்லூரிகளில்கூட ஆட்டோமொபைல் டிசைன் படிப்பு கிடையாது. இன்டஸ்ட்ரியல் டிசைன் கோர்ஸ்கள் தான் உள்ளன. டிசைன் படிப்புகளுக்கும் ஐ.ஐ.டிதான் பெஸ்ட். M.Des (Master of Design)  படிக்க (CEED-Common Entrance Exam for Design)  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதுகலை படிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் உண்டு.

NID (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்)

ஆமதாபாத்தில் உள்ள இது ஒரு மிக முக்கியமான நிறுவனம். ப்ளஸ் டூ மாணவர்களுக்கு நான்கரை வருட டிப்ளமோ படிப்பும், டிகிரி முடித்தவர்களுக்கு பி.ஜி டிப்ளமோவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் எந்தப் பல்கலைக் கழகத்தோடும் சேராத ஒரு தன்னாட்சி அமைப்பு. அதனாலேயே இங்கு பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மட்டும் கொடுக்கப்படுகிறது.ஜி.டி.பி.டி. (GDPD - Graduate Diploma Programme in Design)பி.ஜி.டி.பி.டி.(PGDPD- Post graduate diploma in Design) இன்டஸ்ட்ரியஸ் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என பல பிரிவுகளில் இந்த டிப்ளமோ வழங்கப்படுகிறது. இந்த வருட சேர்க்கைக்கான காலம் முடிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலேயே சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பமாகிவிடும். மேலும் விபரங்களுக்கு ஷ்ஷ்ஷ்.ஸீவீபீ.மீபீu என்ற வலைதளத்தைக் காணவும்.ஐ.ஐ.டி. என்.ஐ.டி. தவிர்த்து டிசைனிங் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு வெளிநாடு செல்வது புத்திசாலித்தனமான செயல். ஐரோப்பாவில் சில நாடுகளிலும், கனடாவிலும் கல்லூரிகள் அதிகம். ஆனால், மக்கள் தொகை குறைவு. எனவே, திறமையான மாணவர்களை முழுவதுமாக ஸ்பான்ஸர் செய்து படிக்க வைக்க பல கல்லூரிகள் உள்ளன. 

http://edhugai.blogspot.in/2014/02/blog-post_7.html

Thursday 6 February 2014


அகத்தியர் சில உண்மைகள்  !!!

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.



தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்

http://edhugai.blogspot.in/2014/02/blog-post_6.html

Wednesday 5 February 2014


எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் - பால் பிரடனின் நேரடி அனுபவம் 


எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.



அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன் ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். "நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்..."

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்

பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். "நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்"

அந்த உயர் அதிகாரி "அனுமதிக்க முடியாது" என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் "இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்" என்றார்.

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி "நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?"

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த •ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. "அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது..."

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே என் ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது. 

ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப்பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

"ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?"

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். "போதவில்லை"

"திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்"

"நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது"

"எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?"

"எனக்குத் தெரியவில்லை" என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

"சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்" என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. "மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்..."

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. "இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்." அதே நேரத்தில் "இந்த உடலையா நான் "நான்" என எண்ணி இருந்தேன்?" என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. "அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது" என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். "உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!"

அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.

அந்த குரு அவரிடம் சொன்னார். "நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே"

(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)

"இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன"

பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.

"உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்...."

அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. "எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்" என்றார் அந்த குரு.

அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் "பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே" என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ்நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.

தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. "மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்"

ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.

மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும்.

http://edhugai.blogspot.in/2014/02/blog-post_5.html

Sunday 2 February 2014


உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது.அதில் உள்ள விபரம் :-

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்ற னர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search